மனிதர்கள் நோயிலிருந்து விடுபடுவதற்கு மாத்திரை, ஊசி போன்றவற்றையெல்லாம் பயன்படுத்தி அந்த நோயிலிருந்து விடுபட பல முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். இந்தப் பொருள் இந்த நிலைக்கு நல்லது அல்லது கெட்டது என்று தெரிந்துவிட்டால் நோயின் தாக்கத்திலிருந்து பாதுகாப்புப் பெறலாம். அந்த வகையில் ஆயுர்வேதத்தில் ஏதேனும் குறிப்புகள் உள்ளனவா?
இதற்கான விளக்கம் அஷ்டாங்க சங்கிரகம் எனும் ஆயுர்வேத நூலில் கீழ்க்காணும் விதத்தில் காணப்படுகிறது.
உயிரளிக்கும் பொருட்களில் உயர்ந்தது பால்.
களைப்பை நீக்கும் பொருட்களில் உயர்ந்தது நீராடுதல்.
உடலைப் பருக்கச் செய்யும் பொருட்களில் சிறந்தது மாமிசம்.
தாதுக்களுக்கு ஊட்டமளித்து மகிழ்ச்சியுறச் செய்யும் பொருட்களில் சிறந்தவை மாமிசச் சூப்பும், மாம்பழச் சாறுமாகும்.
உணவுக்கு சுவையளிக்கும் பொருட்களில் சிறந்தது உப்பு.
இதயத்திற்கு இன்பமளிக்கும் பொருட்களில் உயர்ந்தது புளிப்புச் சுவை.
உடலுக்கு வலுவைக் கூட்டும் பொருட்களில் உயர்ந்தது கோழி மாமிசம்.
வாதம், கபம் இவற்றைத் தணிப்பவற்றில் உயர்ந்தது எள்-எண்ணெய்.
வாதம், பித்தம் இவற்றைத் தணிப்பவற்றில் மேலானது நெய்.
பித்தம், கபம் இவற்றைத் தணியச் செய்யும் பொருட்களில் சிறந்தது தேன்.
உடலை உறுதிப்படுத்தும் செயல்களில் சிறந்தது உடற்பயிற்சி.
உறக்கம் தரும் பொருட்களில் மேலானது எருமைப் பால்.
சிறுநீரை அதிகம் தோற்றுவிக்கும் பொருட்களில் சிறந்தது கரும்பு.
வயிற்றில் அமிலச் சுரப்பை தோற்றுவிப்பவற்றில் சிறந்தது கொள்ளு.
பித் தம், கபம் இவற்றை ஏற்படுத்துவதில் உளுந்து, எள்ளுடன் கலந்த கோதுமை மாவினால் செய்யப்பட்ட தின்பண்டம், செம்மறி ஆட்டின் பால் இம்மூன்றும் முதன்மையானவை.
ரத்தக் கசிவை ஏற்படுத்தும் ரத்தபித்தம் என்ற நோயைக் கட்டுப்படுத்துபவற்றில் சிறந்தது ஆடாதொடை.
இருமலைக் கட்டுப்படுத்துவதில் சிறந்தது கண்டங்கத்திரி.
அப்போதுதான் அடிபட்ட உட்காயங்களை ஆற்றுவதில் சிறந்தது கொம்பரக்கு.
உட லுருக்கி நோயைப் போக்குவதற்கும், தாய்ப்பாலை வளரச் செய்வதற்கும் ரத்தப்போக்கைத் தடுப்பதற்கும் சிறந்தது வெள்ளாட்டின் பால்.
அதிக வாந்தியை நிறுத்துவதில் சிறந்தது நெல்பொறி.
மூலநோயையும், வீக்கத்தையும் தணிக்கச் செய்வதிலும் மேலானது மோர்.
உடல் நலமின்மையைத் தோற்றுவிப்பனவற்றில் சிறுநீர், மலம் போன்ற இயற்கை உந்துதல்களை அடக்குதல் முதன்மையானது.
பற்களுக்கு உறுதியளிப்பதிலும், சுவையூட்டுவதிலும் நல்லெண்ணெய்க் கொப்பளித்தல் சிறந்த வழியாகும்.
எரிச்சலைத் தணிக்கச் செய்யும் பூச்சுப் பொருட்களில் உயர்ந்தவை சந்தனமும் அத்தியுமாகும்.
எரிச்சல், தோல்வியாதி இவற்றை நீக்கும் பூச்சுப் பொருட்களில் விலாமிச்ச வேரும், வெட்டி வேரும் உயர்ந்தவை.
கண், ஆண்மை, கூந்தல் வளர்ச்சி, குரல் வளம், வலிவு உடல்மினுமினுப்பு, காயமாற்றுதல் இவற்றிற்குப் பயன்படுத்தும் பொருட்களில் அதிமதுரம் சிறந்தது.
தாதுக்களுக்குப் பலமளித்து ஆயுளை நிலைநிறுத்துவதற்குச் சிறந்த பொருள் நெல்லிக்கனி.
நீர்ச்சுருக்கு, வாதத்தைக் கண்டித்தல் இவற்றிற்குச் சிறந்தது நெருஞ்சில்.
நீரிழிவு நோயைக் கண்டிக்கும் பொருட்களில் உயர்ந்தது மஞ்சள்.
நோயாளிகளுக்குள்ள குணங்களுள் மேலானது மருத்துவர் சொற்படி நடத்தல்.
நோயை வளர்க்கும் பொருட்களில் வருந்துதல் குறிப்பிடத்தக்க காரணமாகும்.
சோம்பலை வளர்ப்பதில் தூக்கமும், வலுவை உண்டாக்குவதில் அறுசுவையுள்ள அன்னத்தைப் பயன்படுத்தலும் காரணமாகும்.
அமைதியான மனநிலையே கரு நிலைத்திருப்பதற்குக் காரணமாகும்.
பசித்தீயைக் கெடுப்பதில் மாறுபட்ட உணவும், மாறுபட்ட வேளைகளில் உண்பதும் முக்கியமானவையாகும்.
ஒரே இடத்தில் அமர்ந்து உண்பது, நன்றாகப் படுத்து உறங்குதல், உண்ணும் உணவு நன்கு சீரணமடையச் செய்வதில் சிறந்தன.
நன்றி:
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
No comments:
Post a Comment