என் வயது 36. எந்நேரமும் உடல்கனம், சோர்வு, இருமல், சோம்பல், நாக்கில் ருசியின்மை, தலைச்சுற்றல், உடல் வீக்கம், நிறம் வெளுத்து, சோகை போன்ற உபாதைகளால் மாறி மாறி அவதிப்படுகின்றேன். இந்நோய்க்கான காரணம் என்ன? என்ன மருந்து சாப்பிடுவது?
ரத்த சோகையில் நீங்கள் குறிப்பிடும் இந்த உபாதைகள் தென்படும். அதிலும் குறிப்பாக கபதோஷத்தைத் தூண்டிவிடும் உணவு வகைகளான அதிக இனிப்பு, குளிர்ச்சி, எண்ணெய்ப் பசை கொண்ட பதார்த்தங்களை விரும்பிச் சாப்பிடுதல், உடலுக்கும் மனதிற்கும் அதிக உழைப்பின்றி சோம்பலான வாழ்க்கைமுறை, பகலில் படுத்து உறங்குதல் போன்ற செயல்களாலும் இந்த ரத்த சோகை ஏற்படுகிறது.
÷மனிதர்களுடைய மனதில் ஏற்படும் பேராசை, கவலை, பயம், கோபம், வருத்தம் போன்றவற்றின் தொடர் தாக்கங்களால் இதயப் பகுதியில் அமைந்துள்ள சாதகம் எனும் பித்தம் சீற்றமுற்று, வாயுவினால் உந்தப்பட்டு, இதயத்தினோடு சேர்ந்துள்ள பத்து குழாய்களின் வழியாக உடலெங்கும் பரவி, தோலுக்கும் அதன் கீழேயுள்ள தசைப்பகுதிக்கும் வந்து தஞ்சம் அடைகிறது.
தஞ்சமடைந்த இந்த பித்தமானது கபம், வாயு, ரத்தம், தோல் மற்றும் தசைப் பகுதிகளைக் கெடுத்து, பலவித நிறங்களாகிய வெளுப்பு, மஞ்சள், பச்சை போன்றவற்றை தோலில் ஏற்படுத்துகின்றது. இதற்கு சோகை அல்லது பாண்டு என்று பெயர் என சரகர் முனிவர் தான் இயற்றிய சரகஸம்ஹிதை எனும் நூலில் தெரிவிக்கிறார்.
* சோகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ள தங்களுக்கு ரத்தத்தையும் அதன் அணுக்களையும் அதிகரிக்கும் நேரடி மருந்துகளால் பயனேதும் ஏற்பட வாய்ப்பில்லை. குடல் பகுதியைச் சுத்தப்படுத்தும் வாந்தி மற்றும் பேதிமுறைகளை முதலில் செய்து கொள்ள வேண்டும்.
அவற்றைச் செய்யும் முன் குடலுக்கு எண்ணெய்ப் பசையைத் தரும் ஆயுர்வேத நெய் மருந்துகளாகிய தாடிமாதி கிருதம், பஞ்சகவ்ய கிருதம், மஹாதிக்தக கிருதம், கல்யாணக கிருதம் போன்றவற்றில் ஒன்றைச் சிறிது சிறிதாகச் சாப்பிட்டு அதன்பின்னர் குடல் சுத்தி முறைகளைச் செய்வது மிகவும் நல்லது.
* குடல் சுத்திக்குப் பிறகு, பழைய பச்சரிசியுடன் பார்லி, கோதுமை ரவை ஆகியவற்றை வேகவைத்து, பச்சைக் கொண்டைக் கடலை, மஸýரப் பருப்பு வேகவைத்த தண்ணீருடன் சேர்த்து ஆட்டுக்கால் மாமிச சூப்பும் அதனுடன் வெதுவெதுப்புடன் சாப்பிட வேண்டும்.
ஆயுர்வேத மருந்தாகிய நவாயஸ சூர்ணம் எனும் மருந்தை 2.5 கிராம் வீதம் எடுத்து 5மி.லி. பசு நெய், 2.5 மி.லி. தேனுடன் குழைத்து காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். பசி நன்றாக உள்ள நிலையில், மண்டூர வடகம் எனும் மாத்திரையை மோருடன் சாப்பிட்ட பிறகு, அது செரித்த பிறகு மேற்குறிப்பிட்ட பத்திய உணவைச் சாப்பிடுவது மிகவும் நல்லது. உடலில் ஏற்படும் வீக்கம் வடிவதற்கு புனர் நவ மண்டூரம் எனும் மாத்திரையை இரவு உணவிற்கு முன், மோருடன் சாப்பிட வேண்டும்.
* நாட்பட்ட சோகை நோய், தோலில் ஏற்படும் கடும்
வறட்சி, உடல் வீக்கம் நீடித்த நிலையிலேயே இருத்தல், பார்வைக்குத் தென்படும் அனைத்தும் மஞ்சள் நிறமாகத் தென்படுதல், கடுமையான மலச்சிக்கலால் அவதியுறுதல் அல்லது பச்சை நிறத்துடன் பிசுபிசுப்பாக மலம் கழிதல், உடலில் கடுமையான அசதி ஏற்படுதல், உடல் நிறம் வெள்ளையாக இருத்தல், வாந்தி, மயக்கம், தண்ணீர், தாகம் கடுமையாக இருத்தல் போன்ற சோகை நோயின் அறிகுறிகள் சிகிச்சைக்கு வசப்படாது என்பதைக் காட்டுகின்றன.
* அதனால் நீங்கள் வெறும் டானிக், மருந்துகள் மூலமாகவும், ஊசி மருந்துகள் மூலமாகவும் இந்நோய்க்கான தீர்வை நாடாமல், முன் குறிப்பிட்டுள்ளது போல, குடல் பகுதியைச் சுத்தமாக்கி, பசியைத் தூண்டும் உணவு வகைகளை அன்றாடம் உணவில் சேர்த்து, கல்லீரல் நன்றாக வேலை செய்யும் அளவிற்கு உடல் திறனை அடைந்துவிட்டால், உங்கள் உடல் விரைவில் ஊட்டம் அடைந்து நீங்கள் குறிப்பிடும் உபாதைகளிலிருந்து விரைவில் விடுபடலாம்.
நன்றி:
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்
very good.keep it up
ReplyDeleteshahubar